Friday, June 29, 2018

கேட்ட கேள்வி..!

23 முறை கேட்ட கேள்வி..!

ஒரு வசதியான வீட்டின் வரவேற்பறைக்கு முன்பு 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஜன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவருடன் அவரது மனைவியும் அமர்ந்து கொண்டிருந்தார். அவர்களுக்கு 45 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரும் அவர்கள் கூடவே அமர்ந்து லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்த சமயம் திடீரென ஒரு காகம் முதியவரின் அருகில் இருந்த ஜன்னலில் வந்து அமர்ந்தது.

அப்போது அந்த முதியவர் தன் மகனிடம்! என்ன இது?.. என்று கேட்டார்.

அங்கு லேப்-டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மகன் அது ஒரு காகம்! என்று கூறினார். சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும்! என்ன இது? என்று கேட்டார்.

அதற்கு மகன் இப்பத்தானே சொன்னேன் அது ஒரு காகம் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மூன்றாவது முறையாக அந்த முதியவர் தன் மகனிடம்! என்ன இது? என்று கேட்டார். சற்று எரிச்சலான குரலில் மகன்! அது ஒரு காகம் காகம்! என்று பதிலளித்தார்.

இன்னும் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவனது தந்தை நான்காவது முறையாக என்ன இது? என்று கேட்டார்.

அதனைக் கேட்ட மகன் பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கோபமாக அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வேன் அது ஒரு காகம்! என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா? என்று கத்தினார்.

முதுமை அடைந்த தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து திருமுறையை ஓதிக்கொண்டிருந்த முதியவரின் மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்றை எடுத்துக் கொண்டுவந்தார்.

அது அந்த முதியவரின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அந்த நாட்குறிப்பை எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்த தாய் அதை தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். 

அந்தப் பக்கத்தில் எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது ஜன்னலில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அப்போது என் மகன் 'அது என்ன" என்று 23 தடவைகள் கேட்டான். 'அது ஒரு காகம்" என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறையும் அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக கள்ளங்கபடமற்ற என் குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது! என்று எழுதி இருந்தது. 

இதைப் படித்த மகனின் கண்கள் கலங்கின. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவர் மனம் வருந்தினார்.

தத்துவம் :

பெற்றோர்களின் மனதை புண்படுத்தாமல் புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் அவர்கள் வாழும் இறுதி காலத்தில் இன்பமாக வாழ்வார்கள்.

No comments: